
4 லட்சம் பேர் வெளியேற்றம்; உஷார் நிலையில் முப்படைகள்
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர், பஞ்சாபில் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தரைப்படை, விமானப்படை, கடற்படைத் தளங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட் டுள்ளன. எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு வருகின் றனர்.
கடந்த 18-ம் தேதி காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நேற்றுமுன்தினம் அதிரடியாக புகுந்த இந்திய வீரர்கள், 7 தீவிரவாத முகாம்களை அழித்தனர். இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் தாக்குதலால் அதிர்ச்சியடைந்துள்ள பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லைப் பகுதி களில் சண்டை நிறுத்தத்தை மீறி அவ்வப்போது பீரங்கி தாக்குதல் களை நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அந்த நாட்டு ராணுவ உயரதி காரிகளுடன் பல்வேறு கட்டமாக ஆலோ சனை நடத்தி வருகிறார்.
அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், அணுஆயுதங்களை அலமாரியில் வைத்திருப்பதற்காக நாங்கள் தயாரிக்கவில்லை. எங்கள் மீது போரை திணித்தால் இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் இருநாட்டு எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 6 மைல் தொலைவுக்கு உட்பட்ட அனைத்து கிராம மக்களும் பாது காப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பஞ்சாபின் 6 மாவட்டங்கள் சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ளன. அந்த மாவட்டங்களில் எல்லைக்கோட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் வசிக்கும் ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்காக பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
வீடு, வயல், தோட்டம், கால்நடை போன்றவற்றை விட்டு திடீரென வெளியேறுவது கடினமாக இருந்தாலும் பாசில்கா, குர்தாஸ்பூர் பகுதி மக்கள் ராணுவ நடவடிக்கைக்கு முழு ஆதரவு தெரிவிக்கின்றனர். அப்பகுதி மக்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் கோஷங்களை முழங்கியபடி வெளியேறுகின்றனர்.
போர் பதற்றம் காரணமாக எல்லையோர கிராமங்களில் ஏடிஎம் மையங் களில் பணம் எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சாலை களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
பஞ்சாபில் சண்டிகர், அம்பாலா, பதிண்டா, ஆதம்பூர், ஹல்வாரா ஆகிய இடங்களில் உள்ள விமானப்படைத் தளங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. ராணுவ தளங்கள் மட்டுமன்றி பக்ரா அணை, எண் ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
காஷ்மீர், பஞ்சாப் மட்டுமன்றி ராஜஸ் தான், குஜராத் எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சர்வதேச எல்லை யில் பெருமளவில் குவிக்கப்பட்டுள் ளனர்.
காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் உள்ள ராணுவ முகாம்கள், விமானப் படைத் தளங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள கடற்படைத் தளங்களும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராஜ்நாத் ஆலோசனை
எல்லை பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலாளர் ராஜீவ் மகரிஷி மற்றும் பாதுகாப்பு, உளவுத் துறை மூத்த அதிகாரிகள் பங்கேற் றனர்.
பெருநகரங்கள் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படும் அச்சுறுத் தல்கள் இருப்பதால் அடுத்த 30 நாட்களுக்கு மாநில அரசுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். நாடு முழுவதும் விமான நிலையங்கள், துறை முகங்கள், சுற்றுலா தலங்களில் பாது காப்பை அதிகரிக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
வீரரை மீட்க நடவடிக்கை
பாகிஸ்தான் எல்லையில் நுழைந்ததாக இந்திய ராணுவ வீரர் சாந்து பாபுலால் சவுகான் என்பவரை அந்த நாட்டு ராணு வத்தினர் நேற்றுமுன்தினம் பிடித்துச் சென்றுள்ளனர்.
‘அவர் ராணுவ நடவடிக்கையில் பங்கேற்க வில்லை, காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டுள்ளார்’ என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய வீரரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.