தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திமுக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19-ந் தேதிகளில் நடைபெறும் என மாநில தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே வேட்பு மனு தாக்கல் தொடங்குவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்திருந்தன. திமுக சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், "உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. உதாரணத்துக்கு சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ஒன்றுகூட பழங்குடியினருக்கு ஒதுக்கப்படவில்லை. அதேபோல் தேர்தல் தேதியை அறிவித்த மறுநாளே வேட்புமனு தாக்கல் என தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது ஆளுங்கட்சிக்கு சாதகமான போக்கு" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமார சுவாமி ஆஜரானார். கடந்த 2006, 2011-ம் ஆண்டுகளில் திமுக, அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த பின்பற்றப்பட்ட அதே வழிமுறைகளையே பின்பற்றியதாகக் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி கிருபாகரன் தீர்ப்பை இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்திருந்தார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்வதாக நீதிபதி கிருபாகரன் தீர்ப்பளித்தார்.
உள்ளாட்சித் தேர்தலே ஆணிவேர்..
"தமிழகத் தேர்தல் ஆணையத்தின் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யப்படுகிறது. மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும். உள்ளாட்சித் தேர்தல்தான் ஜனநாயகத்தின் ஆணிவேர். ஆணிவேர் சரியாக இருந்தால்தான் ஜனநாயகம் வலுப்பெறும்.
புதிய அறிவிப்பாணை வெளியிடுவதற்கு முன்னர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்துக்கு உரிய பிரதிநித்துவம் வழங்கப்பட வேண்டும். கிரிமினல் பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது. உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயக முறைப்படி செயல்படுத்த வேண்டும். பணம் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கக் கூடாது."
இவ்வாறு நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சித் தேர்தலுக்கான வழிமுறைகளை தெரிவித்தார்.
No comments:
Post a Comment