நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் காவிரி பிரச்சினை மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. 10.30 மணி வரை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் காவிரி நதிநீர் தொடர்பான உயர்நிலை தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரம் தெரிவிக்கின்றது.
மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்கான தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரி நியமித்தல், அதற்காக அவசரச் சட்டம் இயற்றுதல், தமிழக அரசின் திட்டங்களுக்கான நிதி ஒதுக்குதல் போன்றவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
முதல் கூட்டம்:
தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 27 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசு நிர்வாகம் தொடர்பாக திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். அரசுப் பணிகளை கவனிக்க பொறுப்பு முதல்வர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன.
இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த உள்துறை, பொதுத்துறை உள்ளிட்ட துறைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்துக்கும் ஓ.பன்னீர்செல்வமே தலைமை ஏற்பார் என தெரிவித்திருந்தார்.
முதல்வரின் பொறுப்புகளை ஓ.பன்னீர்செல்வம் ஏற்ற பிறகு அவரது தலைமையில் முதல்முறையாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
No comments:
Post a Comment