மோடி அரசு 85 கோடி மக்கள் மீது போர் தொடுத்துள்ளதாக குற்றம்சாட்டிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ரூபாய் நோட்டு நடவடிக்கையை ஒட்டி அதிருப்திகளை அடுக்கினார்.
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுகளின் 7 அம்சங்கள்:
* கடந்த 20 நாட்களாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களைப் பார்க்கும்போது நவம்பர் 8-ம் தேதியை சுனாமி ஏற்பட்ட நாளாகவே மக்கள் பார்க்கிறார்கள்.
* முதலில் 3 நாள்களில் நிலைமை சீராகிவிடும் என மத்திய அமைச்சர்கள் கூறினர். ஆனால், இப்போது 50 நாள்கள் பொறுத்திருக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுக்கிறார். சிறு வியாபாரிகள், பூ விற்பவர்கள், தெருவோர வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் என பலதரப்பட்ட மக்களும் சொல்ல முடியாத துன்பத்துக்கும் ஆளாகியுள்ளனர்.
* சாமானிய மக்களால் காய்கறிகள், பால், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியவில்லை. வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை.
* டிசம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு அரசு, பொது, தனியார் துறை ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் என கோடிக்கணக்கானோருக்கு ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. இவர்களுக்கான ஊதியத்தை வங்கிக் கணக்கில் சேர்த்தால் பணம் எடுக்க வங்கிகள், ஏ.டி.எம்.களில் மக்கள் கூட்டம் அலைமோதும் ஆபத்து உள்ளது.
* நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்றார். ஆனால், இதுவரை ரூ.15 கூட டெபாசிட் செய்யவில்லை.
* இந்தியாவில் சுமார் 85 கோடி பேர் கிராமங்களில் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலான மக்களுக்கு வங்கிக் கணக்கு கிடையாது. அவர்கள் எப்படி ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்ய முடியும்?
* மோடி அரசு 85 கோடி மக்கள் மீது போர் தொடுத்துள்ளது. வளர்ச்சி என்ற கோஷத்தை முன்வைத்து மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், கடந்த 20 நாட்களாக வளர்ச்சி முடங்கியுள்ளது. மக்களின் சிரமங்களைப் போக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment