உ.பி.யில் இன்று காலை வந்து கொண்டிருந்த இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. 150-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ம.பி. மாநிலம் இந்தூரில் இருந்து பிஹார் மாநிலத் தலைநகர் பாட்னாவிற்கு சென்று கொண்டிருந்தது இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ். இதில் பயணம் செய்து கொண்டிருந்த பெரும்பாலான பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அப்போது, உ.பி.யின் கான்பூரில் உள்ள ஊரகப்பகுதியின் புக்கரையான் அருகே விடியற்காலை கடந்த ரயிலில் திடீர் என விபத்து ஏற்பட்டது.
சரியாக 3.10 மணிக்கு அதன் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து இறங்கத் துவங்கின. தொடர்ந்து அடுத்தடுத்து 14 ரயில் பெட்டிகளும் ஒன்றன் மீது ஒன்றாக மோதி நசுங்கின. இதில், உயிரிழந்த பயணிகளின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. இதுவரை 65 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. 150-க்கும் அதிகமான பயணிகள் படுகாயம் அடைந்து 100 கி.மீ தொலைவிலுள்ள கான்பூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து உ.பி.யின் சட்டம்-ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரலான தல்ஜித் சிங் சவுத்ரி 'தி இந்து'விடம் கூறுகையில், ''முன்பகுதியில் இருந்த இரு பொதுபயணிகள் பெட்டி, 4 குளிர்சாதன பெட்டி மற்றும் எஸ்-1 முதல் எஸ்-6 வரையிலான ரிசர்வ் உட்பட 14 பெட்டிகள் மிகவும் மோசமாக நசுங்கியுள்ளன. எஸ்-7 முதல் எஸ்-12 வரையிலான பெட்டிகள் பாதுகாப்பாக உள்ளன. இதில் இருந்த பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இதில் சிக்கிய பயணிகளை மீட்க பல பெட்டிகளை கேஸ் கட்டரால் வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருட்டில் தடைபட்டிருந்த மீட்புப் பணிகள் விடியலில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன'' எனத் தெரிவித்தார்.
உ.பி. முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் தம் நேரடியாகத் தலையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார். உ.பி.யின் லக்னோவில் முகாம் இட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உடனடியாக புக்கரையான் அடைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவியாக, உ.பி. போலீஸ், மத்திய பாதுகாப்பு படை, ரயில்வே போலீஸ் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்திய ராணுவத்தின் 250 வீரர்களும் மீட்புப்பணியில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு உதவியாக ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன.
விபத்து ரயிலில் மீட்கப்பட்ட பயணிகள் பத்திரமாக வீடு திரும்பும் பொருட்டு உ.பி. மாநில அரசின் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ம.பி.யின் இந்தூரில் கிளம்பிய இந்த அதிவிரைவு ரயில் தாமதம் இன்றி வழக்கமான நேரத்தில் அந்த இடத்தை கடக்க வந்துள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
இந்த பயங்கர ரயில் விபத்தின் மீது மத்திய ரயில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனது உத்தரவில் அவர் கூறி உள்ளார்.
இது குறித்து பிரபு, ''ரயில் துறை உயர் அதிகாரிகள் குழுவை உடனடியாக விபத்து நடைபெற்ற இடத்திற்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கான்பூரை சுற்றியுள்ள தொகுதிகளின் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களையும் அங்கு உதவ வேண்டி விரைந்துள்ளனர். இந்த சோகமான சம்பவத்தில் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது'' என தெரிவித்துள்ளார்.
இழப்பீடு தொகை அறிவிப்பு
ரயில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு உ.பி. முதல்வர் அகிலேஷ் தலா ரூபாய் ஐந்து லட்சம் அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 மற்றும் சிறிய காயம்பட்டவர்களுக்கு ரூபாய் 25,000 இழப்பீடு தொகையாக அறிவித்துள்ளார்.
ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் விபத்தில் உயிர் இழந்த பயணிகளுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார். இதில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் அளிப்பதாக கூறியுள்ளார். மத்திய அரசு சார்பில் ரூபாய் 3.5 லட்சம் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் என மத்திய ரயில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான ரயிலில் இருந்து இன்னும் முழுமையாக பயணிகள் மீட்கப்படவில்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணியில் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
No comments:
Post a Comment