சென்னை: ரூ.500, 1000 செல்லாது என்ற மத்திய அரசு அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ராஜாஜி சாலையில் திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட ஸ்டாலின் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார். பணமில்லை பணமில்லை ஏ.டி.எம்-ல் பணமில்லை, வங்கியில் பணமில்லை என்று ஸ்டாலின் கோஷமிட்டார். மோடி அரசும் சரியில்லை, ஜெயலலிதா அரசும் சரியில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் முழக்கமிட்டார்
பணம் இருந்தும் பசிக்கிறது, நாடு முழுவதும் மக்கள் தவிக்கின்றனர் என்றும், வாழ விடு, வாழ விடு நாட்டு மக்களை வாழவிடு என்றும் ஸ்டாலின் கோஷமிட்டார். மேலும் மக்கள் பிரச்சனை தீரும் வரை போராடுவோம், மத்திய அரசை கண்டித்து போராடுவோம் என்றும் அவர் கூறினார். திருமணம் செய்ய பணமில்லை, மருந்து வாங்க பணமில்லை என்றும் ஸ்டாலினுடன் சேர்ந்து தொண்டர்களும் முழக்கமிட்டனர். ஆர்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் நாடு முழுவதும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது திமுகவினர் மட்டும் நடத்தும் போராட்டம் அல்ல. நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சியினர் ஒருங்கிணைந்து போராட்டம் செய்து வருகின்றனர். கடையடைப்பு, சாலை மறியல், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு கட்சியினர் மட்டும் நடத்தும் அரசியல் போராட்டமல்ல நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மத்திய அரசைக்கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் இந்தியன் வங்கியை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை கைது செய்து அருகில் இருந்த மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மத்திய பாஜக அரசைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் வெற்றி பெற்றதாக கூறினார். மத்திய அரசு எந்த வித முன்னேற்றபாடும் செய்யாமல் பணம் செல்லாது என்று அறிவித்தாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
No comments:
Post a Comment