இஸ்லாமியர்களுக்கு முதல் குரல் கொடுக்கும் இயக்கம் திமுக'


இஸ்லாமியர்களின் நலன், உரிமைக்காக எப்போதும் திமுக முதல் குரல் கொடுக்கும் என, அக்கட்சியின் செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி, சிறுபான்மையினர் உரிமைப் பாதுகாப்பு மாநில மாநாடு திருநெல்வேலி பொருள்காட்சித் திடலில் 2 தினங்கள் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை அக்கட்சியின் சாதனை, வரலாற்று நிகழ்வுகள், தகவல்கள் அடங்கிய கண்காட்சி நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற 2ஆம் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று மு.க. ஸ்டாலின் பேசியது: திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு இடையிலான உறவு தொன்றுதொட்டு இருந்து வரும் தொட்டில் உறவு போன்றது.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த காலத்தில்தான் சிறுபான்மை மக்களுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. முகம்மது நபிகள் பிறந்த தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது; இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு, சமச்சீர் கல்வியில் சிறுபான்மையினர் பங்களிப்பு போன்றவை திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது.
மதச்சார்பற்ற நாட்டில் மக்களின் வாழ்க்கை முறையில் தலையிட அரசுக்கு உரிமை கிடையாது. அந்த வகையில் பொது சிவில் சட்டம் கொண்டுவருவதை திமுக அனுமதிக்காது. இஸ்லாமிய மக்கள் நலன், உரிமைக்காக முதல் குரல் கொடுக்கும் இயக்கமாக திமுக இருக்கும் என்றார் அவர்.
மாநாட்டுக்கு தலைமை வகித்து கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் பேசியது: தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைய ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் வெற்றிப் படிக்கட்டாக அமையும். 13இல் திமுக நடத்தும் போராட்டம், 19இல் குமரி அனந்தன் மேற்கொள்ளும் மதுவிலக்கு நடைப்பயணத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளிக்கும் என்றார் அவர்.
திருநாவுக்கரசர்: மாநாட்டில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் பேசியது: இஸ்லாமிய மக்களுக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
பொது சிவில் சட்டம் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தில் திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இணைந்து நல்லாட்சி அமைய காங்கிரஸ் துணை நிற்கும் என்றார் அவர்.
மாநாட்டில், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநிலத் தலைவர் செய்யது முனவ்வர்அலிதங்கள், கட்சியின் முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல்ரஹ்மான், மாநிலச் செயலர்கள் நெல்லை மஜீது, காயல் மகபூப், மாநில துணைத் தலைவர்கள் எஸ்.எம். கோதர் மைதீன், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், எம்.எல்.ஏ.க்கள் டி.பி.எம். மைதீன்கான், ஏ.எல்.எஸ். லட்சுமணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பூங்கோதை ஆலடி அருணா, ஆஸ்டின், ராஜேஷ்குமார், திமுக மாவட்டச் செயலர்கள் மு. அப்துல்வஹாப், இரா. ஆவுடையப்பன், சிவ. பத்மநாபன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர்கள் பாட்டபத்து எம். முகம்மதுஅலி, வி.எம். இக்பால், பொருளாளர்கள் கானகத்திமீரான், செய்யதுஇப்ராஹீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook