இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக மொயின் அலி தேர்வானார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
கான்பூர் கிரீன்பார்க் மைதானத் தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி யின் கேப்டன் மோர்கன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் பர்வேஸ் ரசூல் அறிமுக வீரராக களமிறங்கினார்.
இளம் அதிரடி வீரர் ரிஷப் பன்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட வில்லை. மாறாக கேப்டன் விராட் கோலியே கே.எல்.ராகுலுடன் தொடக்க வீரராக களமிறங்கினார். ராகுலின் மோசமான பார்ம் இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. 9 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல், கிறிஸ் ஜோர்டான் வீசிய ஷாட்பிட்ச் பந்தில் அடில் ரஷித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 4.3 ஓவர்களில் 34 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். பவர் பிளேவில் இந்திய அணி 47 ரன்கள் சேர்த்தது. ஸ்கோர் 55 ஆக இருந்த போது கோலி, மொயின் அலி பந்தில் மிட்விக்கெட் திசையில் நின்ற மோர்கனின் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் 26 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்தார். இதன் பிறகு வந்த யுவராஜ் சிங் 13 பந்துகளில் 12 ரன்கள் மட்டும் எடுத்து பிளங்கெட் பந்தில் நடையை கட்டினார். சிறிது நேரத்தில் ரெய்னா 34 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் போல்டானார். அவர் 23 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை சேர்த்தார்.
அப்போது ஸ்கோர் 12.3 ஓவர்களில் 95 ஆக இருந்தது. இதன் பின்னர் அணியின் ஸ்கோர் பெரிய அளவில் ஏற்றம் காணவில்லை. மணீஷ் பாண்டே 3, ஹர்திக் பாண்டியா 9 ரன்களில் பொறுப்பில்லாமல் விளையாடி விக்கெட்டை பறிகொடுத்தனர். பர்வேஸ் ரசூல் 5 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
கடைசி கட்டத்தில் தோனி, 27 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் மொயின் அலி இரு விக்கெட்கள் கைப்பற்றினார்.
இதையடுத்து 148 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி பேட் செய்தது. ஜேசன் ராய், ஷேம் பில்லிங்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடியது. 3 ஓவர்களில் இந்த ஜோடி 36 ரன்கள் விளாசியது. பும்ரா வீசிய 2-வது ஓவரில் 20 ரன்கள் விளாசப்பட்டது.
4-வது ஓவரில் யுவேந்திரா சாஹல் இரு விக்கெட்களை வீழ்த்தி சற்று நம்பிக்கை அளித்தார். அவரது முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய ஜேசன் ராய் அடுத்த பந்தில் போல்டானார். அவர் 11 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். இதே ஓவரின் 5-வது பந்தில் ஷேம் பில்லிங்ஸூம் போல்டானார். அவர் 10 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்தார்.
3-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டுடன் இணைந்த கேப்டன் மோர்கன் நிதானமாக விளையாடி னார். இந்த ஜோடியின் பொறுப் பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 12.3 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது. வெற்றியை நெருங்கிய நிலையில் 38 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 51 ரன்கள் விளாசிய நிலையில் ரசூல் பந்தில், மோர்கன் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களறிமிறங்கிய ஸ்டோக்ஸூடன் ஜோ ரூட் அசத்தலாக விளையாட 18.1 ஓவரில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஜோ ரூட் 46, ஸ்டோக்ஸ் 2 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணி தரப்பில் சாஹல் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி தேர்வானார். அவர் 4 ஓவர்கள் வீசி 21 ரன்களுக்கு 2 விக்கெட்கள் கைப்பற்றியிருந்தார். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி வரும் 29-ம் தேதி நாக்பூரில் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment