ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்றக் கோரி வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் திமுக ரயில் மறியல் போராட்டம்: ஸ்டாலின்


ஜல்லிக்கட்டு நடத்த உடனடியாக சட்டம் இயற்ற மாநில அரசை வலியுறுத்தியும், தமிழக உரிமைகளை நசுக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும் திமுக சார்பில் வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடியும், திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் போராட்டம் நடத்தியும், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரடியாகச் சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கோரிக்கை விடுத்த பிறகும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வர முடியாது என்று தீர்மானமாக மறுத்து விட்ட மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கு தமிழக மக்கள் விரோத போக்காக அமைந்து விட்டது.
காவிரிப் பிரச்சினை, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, வறட்சி நிவாரண நிதி ஒதுக்குவது, 'வார்தா' புயல் நிவாரண நிதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளில் தொடர்ந்து மத்தியில் இருக்கும் பாஜக அரசு தமிழக நலனை துளியும் மதிக்காதது பிரதமர் பெருமையாக பேசி வரும் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிராக இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டு தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி இறுதித் தீர்ப்பு உரிமையை பறித்த மத்திய அரசு, ஜல்லிக்கட்டு விஷயத்தில் உச்ச நீதிமன்றத்திடம் முறையிடவே மறுப்பது தங்கள் கட்சி வெற்றி பெறும் மாநிலத்தின் கண்ணில் வெண்ணெய். வெற்றி பெற முடியாத மாநிலத்தின் கண்ணில் சுண்ணாம்பு என்ற அநீதிக் கொள்கையை கடைபிடித்து இன்றைக்கு மத்திய- மாநில உறவுகளை கேலிக்கூத்தாக்கியிருக்கிறது.
உறவுக்கு கை கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற உயர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் தொடர்ந்து திமுக மாநில உரிமைகளுக்காக போராடி வரும் சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் தேர்தல் லாபம் தங்களுக்கு இல்லை என்ற ஒரே காரணத்திற்காக தமிழக உரிமைகளை, தமிழக மக்களின் நலன்களை புறக்கணிக்கும் செயலை திமுக ஒரு போதும் அனுமதிக்க முடியாது. ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
அதே நேரத்தில் மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் மத்திய அரசிடம் மாநில உரிமைகளை நிலைநாட்ட முடியாமல் மூச்சுத் திணறி நிற்கிறது. திமுகவின் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் எனவும், சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும் விடுத்த கோரிக்கை பற்றி இதுவரை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
ஊழலில் திளைக்கும் அதிமுக அரசிடமிருந்து இதை விட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டில் சிக்கி தமிழக மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள், இளைஞர்கள் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு அடங்கிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை பாதுகாக்க வீறுகொண்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்து திமுக ஆதரவு தெரிவித்து வருகிறது. மொழிப்போராட்டம் நடைபெற்ற போது கிளர்ந்து எழுந்த எழுச்சி இப்போது தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் எதிரொலிக்கிறது.
ஆகவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாத உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழக உரிமைகளை நசுக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்தும் வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் ரயில் மறியல் அறப்போராட்டம் நடைபெறும். திமுக உடன்பிறப்புகள் ஜனநாயக முறையில் இந்த போராட்டத்தை நடத்திட வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook