சென்னை: ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றக்கோரி சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் பகல் 12 மணி வரை தமிழக அரசுக்கு கெடு விதித்திருந்தனர். ஆனால் 12 மணியை கடந்தப் பிறகும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சென்னையில் போராட்டக்குழுவினர் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லி சென்றார். இன்று பிரதமரை நேரில் சந்தித்த அவர், ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பேசினார்.
ஆனால் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற முடியாது என பிரதமர் கைவிரித்துவிட்டார். இந்நிலையில் அவசர சட்டம் இயற்றக்கோரி மெரினா போராட்டக்குழு இன்று பகல் 12 மணி வரை கெடு விதித்திருந்தது.
கெடு முடிந்துள்ள நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் இளைஞர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயிலை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதால் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதேபோல் சேலத்தில் காரைக்கால்-பெங்களூரு ரயிலை மறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞர்கள் மத்திய அரசுக்கும் பீட்டாவுக்கும் எதிராக முழக்கமிட்டனர்.
மதுரையிலும் இளைஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
No comments:
Post a Comment