மார்ச் மாதம் ஒரு மழை பெய்யும்.. அது வரலாற்றில் இடம் பெறும் - தமிழ்நாடு வெதர்மேன்


சென்னை: தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பெய்ய விருக்கும் மழையானது வரலாற்றில் இடம்பிடிக்கும் என்றும், அதன் மூலம் பூண்டி, புழல் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயரும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றி விட்டது. பல பகுதிகளில் வறட்சி தாண்டவமாடுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பல விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். பிப்ரவரி மாதத்திலேயே வெயில் கொளுத்தி வரும் நிலையில் மார்ச் மாதத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆறுதல் செய்தி கூறியுள்ளது. சுட்டெரிக்கும சூரியனால் நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது.

மழைக்கு வாய்ப்பு சென்னைக்கு குடிநீர் வழங்கும் பல ஏரிகளில் நீர்மட்டம் அபாய கட்டத்தில் உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் குடிநீர் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க மழை மார்ச் மாதத்தில் பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரவீன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மார்ச் மாத மழை பிரவீன் தனது பதிவில் 1938ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை மார்ச் மாதம் பெய்த மழை அளவுகளை பதிவிட்டு, 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் மிக அதிக அளவில் வரலாற்று சிறப்பு மிக்க மழை அளவு பதிவாகும் என்று குறிப்பிட்டுள்ளார். 
மார்ச் மாதத்தில் வெள்ளம் தமிழகத்தில் மார்ச் மாதம் சராசரியாக 20 மில்லி மீட்டர் மழை தான் பதிவாகும். 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் போல எப்போதாவதுதான் இது அதிகமாகும். அப்போது 167 மில்லி மீட்டர் மழை பதிவானது. இது கடந்த 150 ஆண்டுகளில் மிக அதிகம். அதோடு மார்ச் மாதம் வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல மீண்டும் ஒரு முறை ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏன் என்றால் அது வாழ்நாளில் ஒரு முறை நிகழும் அதிசயம் என்று குறிப்பிட்டுள்ளார் பிரவீன்.

1938 முதல் 2008 வரை பெய்த மழை தமிழகத்தில் கடந்த 1938 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
2008 - 166.9
1984 - 82.0 
1879 - 76.8 
1954 - 67.0 
1893 - 62.0 
1925 - 61.5 
1944 - 57.5 
2006 - 54.5 
1936 - 52.9 
1938 - 50.5

வரலாற்றில் இடம் பெறும் 
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பெய்யவிருக்கும் மழையானது வரலாற்றில் இடம்பிடிக்கும் என்றும், அதன் மூலம் பூண்டி, புழல் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மார்ச் மாதம் மழை பெய்யும் என்று பதிவிட்டிருந்தேன். அந்த நாள் தற்போது வெகு விரைவில் வரவிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மழை 
சென்னையை எடுத்துக் கொண்டால், ஆண்டில் மிகக் குறைவான மழைப் பொழிவு இருக்கும் மாதம் பிப்ரவரி கூட இல்லை. மார்ச் மாதம் தான் என்று சொல்லலாம். சென்னையில் மார்ச் மாதங்களில் வெறும் 5 மில்லி மீட்டர் மழைதான் பெய்யும். இது சாலையைக் கூட முழுதாக நனைக்காது என்றும் பிரவீன் கூறியுள்ளார்.

சென்னையில் மார்ச் மாத மழை வரலாறு சென்னையில் 1938ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை மார்ச் மாதங்களில் அதிக அளவில் பதிவான மழை அளவு குறிப்பிடப்பட்டுள்ளது. மழை அளவு மில்லி மீட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. 
2008 - 137.9 
1933 - 86.9 
1853 - 85.6 
1925 - 72.6 
1852 - 66.5 
1919 - 49.8 
1870 - 43.7 
1893 - 42.2 
1879 - 38.1 
1938 - 36.8

2008ல் சென்னை மழை
சென்னையில் கடந்த 2008ஆம் ஆண்டு 137.9 மி.மீ அளவிற்கு மழை பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு சென்னைக்கு மிக அதிக மழை கூட எதிர்பார்க்கவில்லை. 10 முதல் 20 மி.மீ. மழை பெய்தால் கூட மகிழ்ச்சிதான். மார்ச் 3ம் தேதி தமிழகத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

அணைகளில் நீர்மட்டம் கிருஷ்ணா நதிநீரினால் பூண்டி ஏரி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ரெட்ஹில்ஸ் ஏரி நீர்மட்டம் கணிசமான அளவு தண்ணீர் உள்ளது. தென் மாவட்டங்களில் ஜனவரி மாதம் பெய்த மழையால் தென்மாவட்ட அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. மார்ச் மாத மழையால் தென் தமிழக அணைகளில் நீர்மட்டம் உயரும் என்றும் பிரவீன் குறிப்பிட்டுள்ளார். 

வரலாற்றில் இடம் பெறுமா? 
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழை நூற்றாண்டு கால அளவிற்கு இல்லாத அளவிற்கு கொட்டித்தீர்த்தது. ஏரிகள், நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. இதற்கு நேர் மாறாக நடப்பாண்டு பருவமழை பொய்த்துப்போனது. இந்த நிலையில் பிரவீன் கூறியது போல மார்ச் மாதத்தில் வரலாறு காணாத அளவிற்கு பருவமழை பெய்து மக்களின் மனங்களை குளிர்விக்குமா? பார்க்கலாம்.







Share:

8 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்: தகவல் அறியும் சட்டம் மூலம் ஒரு அதிர்ச்சி தகவல்

கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவ படிப்பிற்கான 29,225 எம்.பி.பி.எஸ் இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் வெங்குளத்தை சார்ந்த சமூக ஆர்வலர் தே. ராஜு. இவர் கடந்த 2009-2010 கல்வியாண்டு முதல் 2016-2017 கல்வியாண்டு வரையிலான 8 ஆண்டுகளில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் நிர்யணிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான மொத்த இடங்கள் எத்தனை? இதில் சேர்க்கை பயனுற்ற அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை? குறித்த தகவல்களை சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் பொது தகவல் வழங்கும் அதிகாரியுடம் தகவல் அறியும் சட்டம் மூலம் கோரியிருந்தார்.
இதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன்படி எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் பொதுத் தகவல் அதிகாரி அளித்த தகவல் விவரம் வருமாறு, கடந்த 2009-2010 கல்வியாண்டு முதல் 2016-2017ம் கல்வியாண்டு வரையிலுமான 8 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ் மாணவர்கள் சேர்க்கை மொத்தம் 29,225 ஆகும். , இதில் அரசு மருத்துவக் கல்லூரியில் 213 மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 மாணவர்கள் என மொத்தம் 278 அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் எம்.பி.பி.எஸ் சேர்ந்துள்ளனர், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜு கூறும்போது, "தமிழகத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் மாணவர்கள் 12ம் வகுப்பு பள்ளிக் கல்வியை முடித்து வெளியே வருகின்றனர். இதில் 60 சதவீதம் பேர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்தவர்கள் ஆவர். மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர 12ம் வகுப்பு மதிப்பெண்ணில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் நேரடியாக சேர்க்கை நடைபெறுகிறது.
இதனடிப்படையில் கடந்த 9 ஆண்டுகளில் 29,225 சேர்க்கப்பட்ட எம்.பி.பி.எஸ் மாணவர்களில் வெறும் 278 மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களாக உள்ளனர். அதாவது வெறும் 1 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள். இதில் அரசு பள்ளியை காட்டிலும், தனியார் பள்ளிகளில் பயின்ற 99 சதவீதம் பேர் மருத்துவக்கல்லூரியில் சேரும் வாய்ப்பை பெறுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் சுமார் ரூ.85000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயினும் தொடர்ந்து அரசு பள்ளிகளின் கல்வித்தரம் குறைந்து கொண்டே போகிறது. இதனால் அரசு பள்ளிகளில் பயிலும் பெருன்பான்மையான ஏழை மாணவர்களுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது வெறும் கனவாகவே உள்ளது.
இந்நிலையில் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதனால் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பது தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களை மேலும் பாதிக்கும்.
எனவே அரசுப் பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்துவதுடன் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிப்பில் சிறப்பு இடஒதுக்கீடும் வழங்க வேண்டும்" என்றார்.
Share:

அதிராம்பட்டினம் பகுதிகளில் நாளை மின் தடை !

அதிராம்பட்டினம் பகுதிகளில் நாளை செவ்வாய்கிழமை (பிப். 28 ) மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் இது பற்றி மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர் கூறியதாவது, நாளை செவ்வாய்கிழமை மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின்சார பெறும் அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, முத்துப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
Share:

சொந்த மண்ணில் இந்தியா படுதோல்வி!


இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் புனேவில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 260 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ரன்களில் சுருண்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 285 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியா வெற்றி பெற 441 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 107 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக புஜாரா 31 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் 333 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை மிரட்டிய, ஸ்டீவ் ஒகேஃப் இரண்டாவது இன்னிங்ஸிலும் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  இந்த வெற்றி மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.
இரு அணி அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் மார்ச் 4ம் தேதி துவங்குகிறது. 
Share:

மரண அறிவிப்பு ( சபினா அம்மாள் அவர்கள் )


மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் அ.க இப்ராஹீம் அவர்களின் மனைவியும், நஜ்முதீன் அவர்களின் தாயாருமாகிய சபினா அம்மாள் அவர்கள் இன்று ஒரத்தநாடு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா நாளை ( 24-02-2017 ) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Share:

நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள், 169 பார்கள் மூடல் - தமிழக அரசு

இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 500 கடைகளும், 169 மதுபான கூடங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை மண்டலத்தில் 105 கடைகளும், கோவை மண்டலத்தில் 44 கடைகளும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் 99 கடைகள், சேலம் மண்டலத்தில் 133 கடைகள், திருச்சி மண்டலத்தில் 119 கடைகள் என மொத்தம் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 169 பார்களும் நாளை முதல் மூடப்படுகிறது. மூடப்படும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்திலேயே வேறு மாற்றுப்பணி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

முதல் டெஸ்ட்: இந்திய பந்து வீச்சில் நிலைகுலைந்த ஆஸி.! விக்கெட்டுகள் மளமள சரிவு


புனே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்துள்ளது. உமேஷ் யாதவ் அபாரமாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியா தரப்பில் ரென்ஷா 68 ரன்களையும், மிட்செல் ஸ்டார்க் அதிரடி 57 ரன்களையும் எடுத்தனர், இதில் ஸ்டார்க் 57 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார், இவருடன் ஹேசில்வுட் 1 ரன்னுடன் ஆடி வருகிறார். ஸ்டார்க், ஹேசில்வுட் இணைந்து கடைசி விக்கெட்டுக்காக 51 ரன்களைச் சேர்த்ததில் ஸ்டார்க் மட்டுமே 49 ரன்களைச் சேர்த்தார்.

முதல் பந்தே திரும்பும் ஒரு பிட்சைப் பார்த்ததில்லை என்று ஸ்மித் கூறியதும் இந்தப் பிட்ச் பற்றிய உண்மைதான், விராட் கோலி, உமேஷ் யாதவின் திறமைகளை மிகவும் தாமதமாகப் பயன்படுத்தியதும் உண்மைதான். உமேஷ் யாதவ் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்தே சரியான லெந்த், வேகம் என்று நல்ல ஒரு வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார். அவரை தொடக்கத்திலேயே கொடுத்திருந்தால் ஆஸ்திரேலியா இன்னும் முன்னமேயே ஆல் அவுட் ஆகியிருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் அஸ்வின் தான் விக்கெட்டுகள் வீழ்த்த தகுதியானவர் என்பது ஊடகரீதியிலான நிறுவல் ஆன பிறகு அவருக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

தொடக்க வீரர்கள் 82 ரன்களைச் சேர்த்த பிறகு இரண்டாவது செஷனில் ஸ்மித், ஓரளவுக்கு ஷான் மார்ஷ், பிறகு ஹேண்ட்ஸ்கம்ப் ஆகியோர் தாக்குப் பிடித்தனர். 

ஆனால் ஷான் மார்ஷ் 3 பவுண்டரிகளுடன் வலுவான தடுப்பாட்டத்துடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் லெக் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்த பிறகே ஆட்டம் திருப்பு முனை கண்டது. ஹேண்ட்ஸ்கம்ப் 22 ரன்களில் ஜடேஜாவின் வழக்கமான ஒரு பந்துக்கு எல்.பி.ஆக, அஸ்வின் மிக முக்கியமான விக்கெட்டாக 27 ரன்கள் எடுத்திருந்த அபாய ஸ்மித்தை வீழ்த்தினார், மிட்விக்கெட்டில் கோலி கேட்சைப் பிடித்தார். ரென்ஷா மீண்டும் களமிறங்கி தன்னுடைய அபாரத் தடுப்பாட்டத்துடன் தளர்வான பந்துகளை பவுண்டரிகளையும் அடித்தார். 

மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் ஜடேஜாவிடம் எல்.பி.ஆக, மேத்யூ வேட் உமேஷ் யாதவ்வின் அருமையான ரவுண்ட் த விக்கெட் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார், இது உண்மையில் கூற வேண்டுமெனில் நாட் அவுட்தான், ஆனால் நடுவர் கையை உயர்த்தியதால் 3-ம் நடுவரும் செவிசாய்த்தார். ரிவியூவைப் பொறுத்தவரை கள நடுவர் அவுட் கொடுத்தாலும், நாட் அவுட் கொடுத்தாலும் ரிவியூவில் பேட்ஸ்மெனுக்கு எதிராகத்தான் தீர்ப்பு வருகிறது. இந்த விதத்தில் மேத்யூ வேட் துரதிர்ஷ்டசாலிதான். 

ரென்ஷா 156 பந்துகளில் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 68 ரன்கள் எடுத்து அஸ்வினின் அருமையான ஸ்லிப் கேட்சுக்குக் காலியானார். ஆனால் ரென்ஷா இங்கு ஆடும் ஆட்டம் அவர் இந்தத் தொடரில் மேலும் சாதிக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது, உடலை விட்டு விலகுமாறு அவர் ஸ்பின் பந்துகளுக்கு மட்டையைக் கொண்டு செல்லவில்லை, உள்ளே வரும் பந்தைத்தான் அவர் தடுத்தாடினார், வெளியே செல்லும் பந்தை ஆடாமல் விட்டு விடுகிறார். ஒருமுறை ஜடேஜாவை மேலேறி வந்து சிக்ஸ் அடித்ததும் அவரது தன்னம்பிக்கைக்கு உதாரணம். 

ரென்ஷாவுக்குப் பிறகு உமேஷ் யாதவ் அடுத்தடுத்த பந்துகளில் ஓகீஃப் மற்றும் லயனை வீழ்த்தினார். இதில் ஓகீஃபுக்கு சஹா பிடித்த கேட்ச் அதி அற்புதமானது. ஒருகையில் டைவ் அடித்து பிடித்தார் சஹா. நேதன் லயன் எல்.பி.ஆனார். 

205/9 என்ற நிலையில்தான் ஸ்டார்க் அதிரடி ஆட்டம் ஆடத் தொடங்கினார், ஜடேஜாவை ஒரே ஓவரில் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என்று 15 ரன்கள் விளாசினார், இதில் ஒரு பவுண்டரி இன்சைடு எட்ஜ். இசாந்த் சர்மாவை இரண்டு பவுண்டரிகள் விளாசினார். அவர் 58 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 57 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். 205/9 என்ற நிலையிலிருந்து ஆல் அவுட் ஆகாமல் ஆஸ்திரேலியா 256/9 என்ற ஸ்கோரை எட்டிய போது இன்றைய ஆட்டம் நிறைவுற்றது. 

இன்று வீசப்பட்ட 94 ஓவர்களில் அஸ்வின் மூன்றில் ஒருபங்காக 34 ஓவர்களை வீசி 10 மெய்டன்களுடன் 59 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உண்மையில் பிட்சில் இருந்த திருப்பத்துக்கு இவர் ஆஸ்திரேலியாவை சுருட்டி இந்த 39 ஓவர்களில் குறைந்தது 5 விக்கெட்டுகளையாவது கைப்பற்றியிருக்க வேண்டும், அதுவும் கோலி இவருக்கு அமைத்த பீல்டிங்கும் குறை கூற முடியாததே. இன்றைய ஆட்டத்தின் பந்து வீச்சு நாயகன் உமேஷ் யாதவ்தான், இவர் 12 ஓவர்கள் 3 மெய்டன், 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள். ஆஸ்திரேலியா அடித்த 30 பவுண்டரிகள் 4 சிக்சர்களில் அஸ்வின், ஜெயந்த் யாதவ், ஜடேஜா 22 பவுண்டரிகளையும் 4 சிக்சர்களையும் விட்டுக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் ஏற்கெனவே முதல் செஷனிலேயே உடையத் தொடங்கிய பிட்சை சேதம் செய்ததற்காக இருமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டார். இதெல்லாம் இல்லாமலேயே நேர்மையாக வெற்றி பெற வேண்டும், ஏனெனில் இத்தகைய செயல்கள் இந்திய பேட்ஸ்மென்களுக்குமே அபாயமானதுதான், காரணம் அங்கு நேதன் லயன், ஓகீஃப் ஆகிய ஸ்பின்னர்கள் உள்ளனர், இந்திய அணி இவர்களை குறைவாக எடைபோட முடியாது.



Share:

அதிரையின் அடிப்படை வ‍சதிகள் வலியுறுத்தி அதிரை பேரூராட்சி முன்பாக திமுக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் !





திராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளின் சுகாதர சீர்கேடுகள், நிரந்திர செயல் அலுவலர் நியமிப்பது, பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 6 கட்சியினர் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் புதன்கிழமை காலை அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்பாக நடைபெற்றது.
இதில் திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன்,  காங்கிரஸ் கட்சி பொருளாளர் நாராயண சாமி,  தமாகா அதிரை பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக செயலாளர் அதிரை அஹமது ஹாஜா, அதிரை பேரூர் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் என். காளிதாஸ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.



Share:

இக்ரா இஸ்லாமிக் மற்றும் மக்தப் ஸ்கூல் ஆண்டு விழா அழைப்புதல்..!!


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினத்தில் இக்ரா இஸ்லாமியக் மற்றும் மக்தப் ஸ்கூல்  தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி   எம் பள்ளி  மாணவச்செல்வங்களின் பங்கேற்கும்  சிறப்பு நிகழ்ச்சிகள் கண்டு மகிழ அனைவரையும் அழைக்கிறோம். இந்த அழைப்பை நேர்முக அழைப்பாக ஏற்றுக்கொண்டு பெற்றோர்களும் பிள்ளைகளும் வந்து கலந்து மகிழுமாறு அன்போடு அழைக்கிறோம்.                                   

இடம்: ரிச்வே கார்டன், அதிராம்பட்டினம்
தேதி:23-02-2017, வியாழன் கிழமை
நேரம்: மாலை மணி முதல் 6 மணி வரை

அழைப்பில் மகிழும்,    
நிர்வாகிகள் & ஆசிரியைகள்  
Share:

170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை கடந்தது ரிலையன்ஸ் ஜியோ


ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யப்பட்டு 170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் அதன் இலவசத் திட்டங்கள் நிறைவடைவதையடுத்து ஏப்ரல் 1 முதலான கட்டணங்களை ஜியோ திட்டமிடும் என்று கூறிய அம்பானி, “வாடிக்கையாளர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள்” என்றார் நெகிழ்ச்சியுடன். 

அவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு விநாடியிலும் 7 புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஜியோ பயனாளர்கள் 100கோடி கிகா பைட்கள் தரவுகளைக் கையாண்டு வருகின்றனர். நாளொன்றுக்கு 3.3 கோடி ஜிபிக்கள் தரவுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் மொபைல் தரவுப் பயன்பாட்டில் இந்தியாவை நம்பர் 1 நாடாக்கியுள்ளனர் ஜியோ வாடிக்கையாளர்கள்.

மேலும் ஜியோ நெட்வொர்க்கில் நாளொன்றுக்கு 5.5 கோடி மணிக்கணக்கிலான வீடியோத்தரவுகள் கையாளப்படுகின்றன. ஏப்ரல் 1-ம் தேதி முதல் இலவச குரல் அழைப்புகளோடு ஏப்ரல் 1 முதல் ரோமிங்கும் இலவசம். ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு முறை கட்டணமாக ரூ.99 மற்றும் மாதத்தொகை ரூ.303க்கு வரம்பற்ற வாய்ஸ் மற்றும் தரவுகள் வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் வாழ்க்கையில் தரவு என்பதே பிராணவாயு, எனவே நாங்கள் எங்கள் சேவைகளை சிறப்புடன் தொடர்வோம், போட்டியாளர்கள் வழங்கும் தரவுகளை விட 20% அதிகமாகவே ரிலையன்ஸ் ஜியோ வழங்கும். முதல் 10 கோடி ஜியோ வாடிக்கையாளார்கள், ரிலையன்ஸின் இணை நிறுவனர்கள். இவர்களுக்காக மேலும் 12 மாதங்கள் இலவச சேவைகள் வழங்கப்படுகிறது. வரும் மாதங்களில் தரவுத் திறனை ஜியோ இரட்டிப்பாக்கும்.

இவ்வாறு கூறினார் முகேஷ் அம்பானி.
Share:

சேமிப்பு கணக்கிலிருந்து வாரத்திற்கு அதிகபட்சம் ரூ.50,000 எடுக்கலாம்: ஆர்.பி.ஐ


ரிசர்வ் வங்கி ஏற்கெனவே அறிவித்தபடி, சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு (வாரம்) திங்கட்கிழமை முதல் ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டது.
கடந்த நவம்பர் 8-ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். இவற்றுக்கு பதில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
எனினும், போதுமான அளவு ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வராததால் நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பல ஏடிஎம்களில் பணம் நிரப்பப்படவில்லை.
இதனால், ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான தினசரி உச்சவரம்பை ரூ.2 ஆயிரமாக ரிசர்வ் வங்கி குறைத்தது. அதேநேரம், ஏடிஎம் அல்லது வங்கிக் கிளைகள் மூலம் ஒரு சேமிப்புக் கணக்கிலிருந்து வாரத்துக்கு ரூ.24 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
பின்னர் புதிய ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்துக்கு வரத் தொடங்கியது. இதையடுத்து, ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான தினசரி உச்சவரம்பு ரூ.2,500, ரூ.4,500, ரூ.10 ஆயிரம் என படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. எனினும், வாரத்துக்கான கட்டுப்பாடு தொடர்ந்து ரூ.24 ஆயிரமாகவே நீடித்தது.
இந்நிலையில், பிப்ரவரி 20-ம் தேதி முதல் வாரத்துக்கான உச்ச வரம்பு ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்றும் மார்ச் 13-ம் தேதி முதல் இந்தக் கட்டப்பாடு முற்றிலுமாக அகற்றப்படும் என்றும் ரிசர்வ் வங்கி இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது. இதன்படி, திங்கட்கிழமை முதல் சேமிப்புக் கணக்கிலிருந்து வாரம் ரூ.50 ஆயிரம் எடுக்கலாம் என்ற அறிவிப்பு அமலுக்கு வந்தது.
Share:

ஐ.பி.எல் போட்டியில் புணே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி நீக்கம்



ஐ.பி.எல் போட்டியில், புணே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனியை நீக்கி, புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை நியமனம் செய்துள்ளனர்.

புனே வாரியர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 10வது சீசன் வரும் ஏப்ரல் முதல் மே மாதம் வரை நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

கடந்த ஐ.பி.எல் 9வது சீசனின் போது புனே அணி மோசமாக விளையாடி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தை பிடித்தது. 14 போட்டிகளில் 5 வெற்றியை மட்டுமே பெற்றது. இதன் காரணமாகவே தோனி நீக்கப்பட்டு, ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதேநேரம் புதிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு தாம் முழு ஒத்துழைப்பை தருவதாக தோனி உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
Share:

தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரதம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வினரால் அரங்கேற்றப்பட்ட ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து
மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத அறப்போர் நடத்தப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 
 
தமிழக சட்டப்பேரவையில் 18-2-2017 அன்று  ஆளும் அ.தி.மு.க.வினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கைக் கோரும் தீர்மானத்தை, அவை மரபுகளுக்கு மாறாக, திட்டமிட்டு, காவல் துறை உயர் அதிகாரிகளை சட்டமன்றத்துக்குள் வரவழைத்து, பிரதான எதிர்க் கட்சியான தி.மு.கழக உறுப்பினர்கள்மீது தாக்குதல் நடத்தி, கூண்டோடு வெளியேற்றி விட்டு, சட்டப்பேரவை விதிகளுக்கு புறம்பாக நிறைவேற்றிய ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள கழக மாவட்டத் தலைநகரங்களில் 22-2-2017 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ‘‘உண்ணாவிரத அறப்போர்"" நடைபெறும்.

கழக சார்பு அணிகள் நிர்வாகிகள், மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஒத்தக் கருத்துடைய அமைப்புகளும் - பொது மக்களும் பெருந்திரளாக பங்கேற்று,  இந்த உண்ணாவிரத அறப்போரினை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார். 
Share:

மரண அறிவிப்பு ( முஹம்மது பாத்திமா நாச்சியா அவர்கள் )



நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹும் செ.மு.அ முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹும் வ.மீ ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹும் செ.மு.அ சாகுல் ஹமீது, மர்ஹும் செ.மு.அ நெய்னா முஹம்மது சாஹிப், மர்ஹும் செ.மு.அ முஹம்மது தம்பி, மர்ஹும் செ.மு.அ முஹம்மது அலியார் ஆகியோரின் சகோதரியும், அமானுல்லா, நிஜாமுதீன் ஆகியோரின் தாயாரும், மு .செ.மு ஜியாவுதீன் அவர்களின் மாமியாருமாகிய முஹம்மது பாத்திமா நாச்சியா அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று ( 19-02-2017 ) காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Share:

மெரினா - காந்தி சிலை அருகே ஸ்டாலின் உண்ணாவிரதம்

image source Sunnews

பேரவையில் திமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியெற்றப்பட்டதைக் கண்டித்து மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே ஸ்டாலின் உண்ணாவிரதம் தொடங்கினார்.
உண்ணாவிரதத்தில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் சட்டப்பேரவையில் நடந்தது குறித்து புகார் அளித்தார். அதற்குப் பிறகு ஸ்டாலின் உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சட்டப்பேரவை சனிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியதும், பேரவைத் தலைவர், அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான தீர்மானத்தை கொண்டு வர முதல்வருக்கு அனுமதி அளித்தார். பலத்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.
ரகசிய வாக்கெடுப்பு மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு தேதியை ஒரு வாரம் ஒத்திவைக்க வேண்டும் என்று ஸ்டாலின் இரு கோரிக்கைகளை முன்வைத்தார். சபாநாயகர் அதை ஏற்காததால் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சபாநாயகர் தனபால், ''அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் திமுகவினரை வெளியேற்ற வேண்டும்'' என்று உத்தரவிட்டார். இதனால் பேரவையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அவைக் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திமுகவினரை வெளியேற்ற முடியாமல் அவைக்காவலர்கள் திணறினர். மீண்டும் அமளி ஏற்பட்டதால் சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டப்பேரவைக்குள் திமுகவினர் தர்ணா
சட்டப்பேரவைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து சேகர் பாபு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உத்திரமேரூர் சுந்தர், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், தளி பிரகாஷ், நந்தகுமார் ஆகியோர் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
அவையில் இருந்து வெளியேற திமுகவினர் மறுப்பு தெரிவித்தனர். தரையில் அமர்ந்து ஸ்டாலின் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குண்டுக்கட்டாக அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய ஸ்டாலின், ''ஜனநாயக முறையில் அறப் போராட்டம் நடத்தினோம். எங்களை குண்டுக்கட்டாக தூக்கி அடித்து, உதைத்து சட்டைகளை கிழித்தனர். இது குறித்து ஆளுநரிடம் முறையிடுவோம்'' என்றார்.
அதற்குப் பிறகு ஸ்டாலின் ஆளுநரை சந்திக்க புறப்பட்டார். ஸ்டாலினுடன் 9 எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்திக்க சென்றனர். ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் நேராக சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து காந்தி சிலை அருகில் உண்ணாவிரதம் தொடங்கினார்.
Share:

எதிர்க்கட்சியினர் இல்லாத பேரவை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி


பேரவையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக தன் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். 
சட்டப்பேரவை சனிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியதும், பேரவைத் தலைவர், அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான தீர்மானத்தை கொண்டு வர முதல்வருக்கு அனுமதி அளித்தார். பலத்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் பேரவை உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினர்.
இந்நிலையில் திமுகவினருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அணியினர் முழக்கமிட்டதால் அமளி ஏற்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு காரணமாக சட்டப்பேரவையின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பிரிவுகளாக அமர்த்தப்பட்டனர். முதல் மூன்று பிரிவுகளில் அதிமுகவினரும், மற்ற மூன்று பிரிவுகளில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமர்ந்தனர்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை
ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு ஓபிஎஸ் அணி கொறடா செம்மலை கோரிக்கை விடுத்தார். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் செம்மலை வேண்டுகோள் விடுத்தார்.
''உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும், எம்.எல்.ஏக்களின் உரிமை, மாண்பு பாதுகாக்கப்படும்'' என்று சபாநாயகர் தனபால் கூறினார். சபாநாயகர் தவிர, சட்டப்பேரவையில் 230 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்க ஸ்டாலின் கோரிக்கை
சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், '' ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே உண்மையான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும். வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்க வேண்டும். ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்திருக்கும்போது அவசரமாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு காரணம் என்ன? " என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் அளித்த அவகாசத்தை கருத்தில் கொண்டே இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறுவதாகக் கூறி ஸ்டாலின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.
முன்னதாக, சிறைக்கைதிகள் போல் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அழைத்து வரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
பேரவையில் ஓபிஎஸ் பேசுகையில், ''கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டதை அனைவரும் அறிவர். மக்களின் குரல் பேரவையில் ஒலிக்க, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதிக்குச் சென்று வந்த பிறகே வாக்கெடுப்பு நடத்த வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
என் உரிமையில் யாரும் தலையிடக் கூடாது: சபாநாயகர்
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று சபாநாயகர் தனபால் கூறினார். மேலும், வாக்கெடுப்பு முறை எனது தனிப்பட்ட முடிவு, என் உரிமையில் யாரும் தலையிடக் கூடாது என்றார்.
மக்களை சந்திக்க சட்டப்பேரவை உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும் என்று மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ நட்ராஜ் கோரிக்கை விடுத்தார். இவ்வாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதால் பேரவை தொடங்கி ஒருமணிநேரம் ஆகியும் வாக்கெடுப்பு தொடங்கவில்லை.
1 மணி வரை அவை ஒத்திவைப்பு
இந்நிலையில், வேண்டும் வேண்டும் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர், எதிர்க்கட்சியினர் சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். இதனால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருக்கைகளை தட்டியும், காகிதங்களைக் கிழித்தெறிந்தும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பேரவையில் இருந்து சபாநாயகர் வெளியேறினார்.
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருக்கைகளை தட்டியும், காகிதங்களைக் கிழித்தெறிந்தும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அமைதி காக்காததைக் கண்டித்து பேரவையில் இருந்து சபாநாயகர் வெளியேறினார். சபாநாயகரை பாதுகாப்பாக அவை காவலர்கள் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டம் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பேரவைத் தலைவர் தனபால் மைக் உடைக்கப்பட்டது. அவரது இருக்கை சேதப்படுத்தப்பட்டது. பேரவை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் உடைக்கப்பட்டது. இந்த பலத்த அமளிக்கு இடையிலும், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டும் அமைதி காத்தது குறிப்பிடத்தக்கது.
அவை 1மணி வரை ஒத்திவைக்கப்பட்டதால், சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளியே வந்து, பிறகு பேரவைக்குள் சென்றனர். இந்த இடைவெளியில் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
108 ஆம்புலன்ஸ் வருகை
தலைமைச்செயலகத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வந்தது. ரகளையின் போது மயக்க வந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட அவைக்காவலர் பாலாஜி ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்.
மீண்டும் கூடிய சட்டப்பேரவை
ஒத்திவைப்புக்குப் பின்னர் சட்டப்பேரவை மீண்டும் கூடியது. சபாநாயகர் தனபால், ''தனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது?அவை விதிகளின்படியே அவையை நடத்த கடமைப்பட்டிருக்கிறேன்'' என்றார்.
திமுகவினர் வெளியேற்றம்; 3 மணி வரை அவை ஒத்திவைப்பு
ரகசிய வாக்கெடுப்பு மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு தேதியை ஒரு வாரம் ஒத்திவைக்க வேண்டும் என்று ஸ்டாலின் இரு கோரிக்கைகளை முன்வைத்தார். சபாநாயகர் அதை ஏற்காததால் திமுகவினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் மைக் இரண்டாவது முறையாக உடைக்கப்பட்டது. அதிமுக அமைச்சர்களின் இருக்கையின் மீதேறி திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சபாநாயகர் தனபால், ''அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் திமுகவினரை வெளியேற்ற வேண்டும்'' என்று உத்தரவிட்டார். இதனால் பேரவையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அவைக் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திமுகவினரை வெளியேற்ற முடியாமல் அவைக்காவலர்கள் திணறினர். மீண்டும் அமளி ஏற்பட்டதால் சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டப்பேரவைக்குள் திமுகவினர் தர்ணா
சட்டப்பேரவைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து சேகர் பாபு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உத்திரமேரூர் சுந்தர், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், தளி பிரகாஷ், நந்தகுமார் ஆகியோர் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
அவையில் இருந்து வெளியேற திமுகவினர் மறுப்பு தெரிவித்தனர். தரையில் அமர்ந்து ஸ்டாலின் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குண்டுக்கட்டாக அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய ஸ்டாலின், ''ஜனநாயக முறையில் அறப் போராட்டம் நடத்தினோம். எங்களை குண்டுக்கட்டாக தூக்கி அடித்து, உதைத்து சட்டைகளை கிழித்தனர். இது குறித்து ஆளுநரிடம் முறையிடுவோம்'' என்றார்.
அதற்குப் பிறகு ஸ்டாலின் ஆளுநரை சந்திக்க புறப்பட்டார். ஸ்டாலினுடன் 9 எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்திக்க சென்றனர்.
காங்கிரஸ் வெளிநடப்பு
இந்த நிலையில் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி
3 மணிக்கு கூடிய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த தீர்மானத்துக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.
குரல் வாக்கெடுப்புதான் மரபு. தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளால் எண்ணிக்கை வாக்கெடுப்பு தொடங்குவதாக சபாநாயகர் தனபால் கூறினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவைக்குள் இல்லாததால் நடுநிலைமை வாக்குகள் எதுவும் இல்லை.
வாக்கெடுப்புக்கு முந்தைய பின்னணி
முன்னதாக, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அதன்பின் டிசம்பர் 29-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். புதிய அமைச்சரவை அமைந்து 2 மாதங்கள் கழிந்த நிலையில், திடீரென பிப்ரவரி 5ம் தேதி, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.
அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக தற்போது 10 எம்எல்ஏக்கள் தலைமையை எதிர்த்து வெளியேறியுள்ளனர். சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னை கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
கடந்த 14-ம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சசிகலா சிறைக்கு சென்றார். அன்றே சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தங்களுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தொடர்ந்து வலியுறுத்தியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். மாலையே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 30 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றது.
முன்னதாக, ஆட்சி அமைக்க அழைக்கும்போது, 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார். அதன்படி, சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், இன்று பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி, அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இது மூன்றாவது முறை...
சட்டப்பேரவையில் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் இதுபோன்ற நிகழ்வு நடப்பது 3-வது முறையாகும். முதலில் 1952-54 காலகட்டத்தில் ராஜாஜி தமிழக முதல்வராக இருக்கும் போது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பின் எம்ஜிஆர் மறைவை அடுத்து 1988-ல் அரசு மீது நம்பிக் கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது
3-வது முறையாக இன்று பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடந்தது.

அதில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக தன் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.
Share:

பேரவைக்குள் எங்களை உதைத்து சட்டைகளை கிழித்தனர்: எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் காட்டம்

]

ஜனநாயக முறையில் அறப் போராட்டம் நடத்தினோம். எங்களை குண்டுக்கட்டாக தூக்கி அடித்து, உதைத்து சட்டைகளை கிழித்தனர். இது குறித்து ஆளுநரிடம் முறையிடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
இது தொடர்பாக இன்று அவர் சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''சட்டப்பேரவையை ஒத்திவைத்ததும் சபாநாயகர் தனபால் அவர் அறைக்கு என்னை அழைத்தார். அவராகவே சட்டையைக் கிழித்துக்கொண்டு, உங்கள் கழகத்தைச் சார்ந்த பேரவை உறுப்பினர்கள் சட்டையைக் கிழித்துவிட்டனர். இது நியாயமா? என்று என்னிடம் கேட்டார்.
தெரிந்தோ தெரியாமலோ தவறு நடந்திருந்தால் நான் பொறுப்பேற்கிறேன். அதற்கு திமுக சார்பில் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று சபாநாயகரிடம் கூறினேன்.
அதற்குப் பிறகு தனி அறையில் பேசியதை சட்டப்பேரவைக்குள் சபாநாயகர் பேசினார். அதை ஏன் சபைக்கு கொண்டு வர வேண்டும்? அவைக்குறிப்பில் எழுதுவதற்காகவே திட்டமிட்டு சபாநாயகர் சட்டப்பேரவையில் பேசினார்.
பேரவை முறையாக நடக்க, நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் இடம் தரவில்லை.
சட்டப்பேரவைக்குள் ஜனநாயக முறையில் அறப் போராட்டம் நடத்தினோம். எங்களை குண்டுக்கட்டாக தூக்கி அடித்து, உதைத்து சட்டைகளை கிழித்தனர். இது குறித்து ஆளுநரிடம் முறையிடுவோம்'' என்றார் ஸ்டாலின்.
Share:

சட்டசபைக்குள் வெடித்தது கலவரம்.. போர்க்களமானது.. மைக்குகளை பிடுங்கி எறிந்து எம்.எல்.ஏக்கள் அமளி

சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. திமுக, ஓபிஎஸ் அதிமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் சசி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து கலவரம் வெடித்தது. சட்டசபை இன்று காலை கூடியதும் சபாநாயகர், சபை கூடியதற்கான காரணங்களை தெரிவித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஓபிஎஸ் அணியின் கொறடா செம்மலை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு சசி தரப்பு எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் திமுக, ஓபிஎஸ் அதிமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதற்கு எதிராக சசி தரப்பு எம்.எல்.ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. உறுப்பினர்களைத் தொடர்ந்து அமைதி காக்க வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தினார். ஆனாலும் அமளி நீடித்தது. இந்த அமளிக்கு இடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால் வாக்கெடுப்பு தொடர்பாக பெரும் அமளியும், கலவரமும் வெடித்தது. நாற்காலிகளை தூக்கி வீசியும், மைக்குகளைப் பிடுங்கி எறிந்தும் பெரும் கலவரத்தில் உறுப்பினர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து பிற்பகல் 1 மணி வரை சபை ஒத்திவைக்கப்ட்டது
Share:

அதிரையில் பி.எஃப்.ஐ ஒற்றுமை அணிவகுப்பு பேரணி

இன்று பிப்-17, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உதய தினத்தை முன்னிட்டு ஒற்றுமையை வலியுறுத்தி, தமிழகத்தில் கோவை, கடையநல்லூர், அதிராம்பட்டினம் ஆகிய 3 இடங்களில்  யுனிட்டி மார்ச் எனும் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்வீரர்களின் சீருடை அணிவகுப்பை அவ்வமைப்பின் மாநிலப் பொருளாளர் வழக்குரைஞர் என்.எம் ஷாஜஹான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணி அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையிலிருந்து புறப்பட்டு சேர்மன் வாடி, இந்தியன் வங்கி, பேருந்துநிலையம், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, பெரிய கடைத்தெரு, ஜாவியா சாலை வழியாக ஈசிஆர் சாலையை கடந்து பள்ளிச்சாலை வழியாக கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடக்க இருக்கும் மாபெரும் பொதுக்கூட்ட மேடையை நோக்கி சென்றடைந்தது. இப்பேரணியில் பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.









Share:

அதிரையில் திமுக கூட்டணி கட்சியினர் 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு !

அதிரையில் திமுக கூட்டணி கட்சியினர் கலந்தாலோசனைக்கூட்டம்  வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு திமுக அதிரை பேரூர் அவைத்தலைவர் ஜே. சாகுல் ஹமீது தலைமை வகித்தார். 

அதிரை திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் அதிரை பேரூராட்சி பகுதிகளின் சுகாதர சீர்கேடுகள், நிரந்திர செயல் அலுவலர் நியமிப்பது, பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் [ 22-02-2017 ] அன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் அதிரை பேருந்துநிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.



( படங்கள் உதவி ஆசிப் )

Share:

பெரும்பான்மையை நிரூபிக்க வரும் 18-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது


பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியுள்ளதைத் தொடர்ந்து வரும்18-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது.
வியாழக்கிழமை அன்று பதவியேற்க எடப்பாடி பழனிசாமியை அழைத்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், 15 தினங்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கூறியிருந்தார்.அதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமியும், அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் நாளை 18-ம் தேதி கூடுவதாக அறிவிப்பு வெளியானது.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர், பேரவையின் அடுத்தக்கூட்டத்தை பிப்ரவரி 18-ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு கூட்டியுள்ளார். அப்போது அமைச்சரவை மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook