தமிழக முதல்வராகிறார் சசிகலா: அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராகவும் தேர்வு


அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா விரைவில் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக வி.கே.சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதை அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் வழிமொழிந்தனர்.
முன்னதாக போயஸ் தோட்ட இல்லத்தில் முதல்வர் ஓபிஎஸ், சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது.
எம்.ஏல்.ஏக்கள் கூட்டத்தில் சசிகலா பேசியதாவது:
''அதிமுகவின் கொள்கைகளைக் கட்டிக்காத்து மாநில அரசு செயல்படும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளைத் தொடர்ந்து கடைபிடிப்பேன். அதிமுக அரசு தொடர்ந்து மக்கள் பணியாற்றும்.
பொதுச் செயலாளராக என்னை முதன்முதலாக முன்மொழிந்தவர் ஓ.பன்னீர்செல்வம். என்னை முதல்வராகப் பதவியேற்க வலியுறுத்தியவர் ஓ.பன்னீர்செல்வம்தான்'' என்றார் சசிகலா.
பிப்ரவரி 7 அல்லது 9-ம் தேதி பதவியேற்பு
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வார். அதற்குப் பிறகு அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தீர்மானம் ஆளுநரிடம் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து ஆளுநர் சசிகலாவை முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுப்பார்.
பிப்ரவரி 7 அல்லது 9-ம் தேதி சசிகலா முதல்வராக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னணி:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். டிசம்பர் 31-ல் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். முதல்வர் பொறுப்பையும் சசிகலா ஏற்க வேண்டும் என சில அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்து வந்தனர்.
கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சி நடந்தது. அமைச்சர்கள் சிலரே அதற்கு அடித்தளம் இட்டனர்.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடப்பதாக தகவல் வெளியானது. ஊருக்குச் செல்ல இருந்த எம்.எல்.ஏக்களை சென்னையில் தங்கியிருக்குமாறு அதிமுக தலைமை அறிவுறுத்தியது. ஊருக்குச் சென்றவர்களை உடனடியாக சென்னைக்கு வருமாறும் கூறப்பட்டது. எம்.எல்.ஏக்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்று, விரைவில் சசிகலா முதல்வராக பொறுப்பேற்கவே இந்த நடவடிக்கை என கட்சி வட்டாரங்களில் கூறப்பட்டது.
இந்நிலையில் அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக வி.கே.சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதை அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் வழிமொழிந்தனர். அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, விரைவில் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதிமுக தலைமையின் இந்த திடீர் நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் நிலைப்பாடு?
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நெருக்கடி ஏற்படும் சூழல் உருவானால், சக்தி அளிப்பதாக திமுகவின் துரைமுருகன் பேசியது, சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஸ்டாலின் அளித்த பேட்டியில், ''தமிழக அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் முதல்வராக தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை. எந்த ஒரு முடிவையும் ஜனநாயக விதிகளுக்குட்பட்டே திமுக எடுக்கும்'' என்று கூறியுள்ளார்.இதனால் திமுகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook