![]() |
image source Sunnews |
பேரவையில் திமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியெற்றப்பட்டதைக் கண்டித்து மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே ஸ்டாலின் உண்ணாவிரதம் தொடங்கினார்.
உண்ணாவிரதத்தில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் சட்டப்பேரவையில் நடந்தது குறித்து புகார் அளித்தார். அதற்குப் பிறகு ஸ்டாலின் உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சட்டப்பேரவை சனிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியதும், பேரவைத் தலைவர், அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான தீர்மானத்தை கொண்டு வர முதல்வருக்கு அனுமதி அளித்தார். பலத்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.
ரகசிய வாக்கெடுப்பு மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு தேதியை ஒரு வாரம் ஒத்திவைக்க வேண்டும் என்று ஸ்டாலின் இரு கோரிக்கைகளை முன்வைத்தார். சபாநாயகர் அதை ஏற்காததால் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சபாநாயகர் தனபால், ''அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் திமுகவினரை வெளியேற்ற வேண்டும்'' என்று உத்தரவிட்டார். இதனால் பேரவையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அவைக் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திமுகவினரை வெளியேற்ற முடியாமல் அவைக்காவலர்கள் திணறினர். மீண்டும் அமளி ஏற்பட்டதால் சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டப்பேரவைக்குள் திமுகவினர் தர்ணா
சட்டப்பேரவைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து சேகர் பாபு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உத்திரமேரூர் சுந்தர், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், தளி பிரகாஷ், நந்தகுமார் ஆகியோர் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
அவையில் இருந்து வெளியேற திமுகவினர் மறுப்பு தெரிவித்தனர். தரையில் அமர்ந்து ஸ்டாலின் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குண்டுக்கட்டாக அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய ஸ்டாலின், ''ஜனநாயக முறையில் அறப் போராட்டம் நடத்தினோம். எங்களை குண்டுக்கட்டாக தூக்கி அடித்து, உதைத்து சட்டைகளை கிழித்தனர். இது குறித்து ஆளுநரிடம் முறையிடுவோம்'' என்றார்.
அதற்குப் பிறகு ஸ்டாலின் ஆளுநரை சந்திக்க புறப்பட்டார். ஸ்டாலினுடன் 9 எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்திக்க சென்றனர். ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் நேராக சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து காந்தி சிலை அருகில் உண்ணாவிரதம் தொடங்கினார்.
No comments:
Post a Comment