தமிழக அரசியலில் அசாதாரண மான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா கடந்த 5-ம் தேதி நடந்த அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக உள்ள மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் எப்போது வேண்டுமானாலும் சென்னை வந்து வி.கே.சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது சென்னை வருகை தள்ளிப் போனது.
திடீர் திருப்பம்
இந்தச் சூழலில் ஓ.பன்னீர் செல்வம் திடீரென கட்டாயத்தின் பேரிலேயே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததா கவும், சக அமைச்சர்களே தன்னை அவமானப்படுத்தியதாகவும் நேற்று முன்தினம் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினார். மக்களும், கட்சி நிர்வாகிகளும் விரும்பினால் தனது ராஜினாமா முடிவை வாபஸ் பெறவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார். இதனால் தமிழக அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் அதிமுகவின் எம்எல்ஏக்கள் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டு தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவும் பங்கேற்றார்.
அதேசமயம் ஆளுநர் வித்யாசாகர் ராவின் சென்னை வருகை குறித்த தகவல்கள் வெளியாகாததால், அதிமுக எம்எல்ஏக்களுடன் டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து வி.கே.சசிகலாவின் பதவியேற்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் கூறப்பட்டது. இதனால் தமிழக அரசியலில் குழப்பமான நிலை உரு வானது.
சஸ்பென்ஸ் நீடிப்பு
இந்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருவதாக மகாராஷ்டிர மாநில ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் அவர் வி.கே.சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பாரா? அல்லது சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு ஒ.பன்னீர்செல்வத்துக்கு உத்தரவிடுவாரா? என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
No comments:
Post a Comment