'வார்தா' புயலால் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கலில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை அருகே திங்கள்கிழமை கரையைக் கடந்த வார்தா புயல், செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டத்தில் தருமபுரிக்கு அருகே மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழந்துக்கொண்டே செல்லக்கூடும்.
வார்தா புயல் கரையைக் கடந்தபோது, நுங்கம்பாக்கத்தில் பதிவான காற்றின் வேகத்தின்படி, புயலின் மேற்கு பகுதி கடந்தபோது மணிக்கு 114 கிமீ வேகத்திலும், கிழக்கு பகுதி நகர்ந்து சென்றபோது அதிகபட்சமாக 72 கிமீ வேகத்திலும் காற்று வீசியது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழக வளாகத்தில் 38 செமீ, கேவிகே காட்டுப்பாக்கத்தில் 34 செமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வடக்கு உள் தமிழக மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கலில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்'' என்று பாலச்சந்திரன் கூறினார்.
No comments:
Post a Comment