"காரைக்குடி-திருவாரூர் அகல இரயில் பாதை திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து, தாமதமாகி வரும் பணிகளை விரைந்து முடித்து இரயில் போக்குவரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்" என பேராவூரணியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராவூரணி ஒன்றிய 11- வது மாநாடு சிவா விழா அரங்கம், தோழர் கே.முத்தையா நினைவரங்கில் செவ்வாய் அன்று நடைபெற்றது. மாநாட்டின் பல்வேறு அமர்வுகளுக்கு ஆர்.மாணிக்கம், என். வெங்கடேசன், எம்.இந்துமதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
முன்னதாக மாநாட்டுக்கொடியை ஒன்றியக்குழு உறுப்பினர் கே.வீரமுத்து ஏற்றி வைத்தார். ஏ.ராமலிங்கம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். ஒன்றியச்செயலாளர் கே.சி.ஆவான் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். வி.தொ.ச மாவட்டச்செயலாளர் கே.பக்கிரிசாமி வாழ்த்திப்பேசினார்.
மாநாட்டில் கே.சி.ஆவான் புதிய ஒன்றியச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கே.சி.ஆவான், எம்.இந்துமதி, ஆர்.மாணிக்கம், கே.வீரமுத்து, ஏ.வி.குமாரசாமி, என்.வெங்கடேசன், ஏ.ராமலிங்கம், கே.ஆனந்தராசு, பி.மாரிமுத்து உள்ளிட்ட ஒன்பது பேர் கொண்ட புதிய ஒன்றியக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் கோ.நீலமேகம் நிறைவுரையாற்றினார்.
மாநாட்டில், " பேராவூரணி தாலுகா அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும். நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்து மாத்திரைகளை தட்டுப்பாடின்றி வழங்கவேண்டும். பேராவூரணி காவல்நிலையம் , தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக தாமதமின்றி நிரப்ப வேண்டும். பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியை புறநகர் பகுதிக்கு கொண்டு செல்லாமல், நகர எல்லைக்குள் புதிய சொந்த கட்டிடத்தில், போதிய பேராசிரியர், கட்டமைப்பு வசதிகளுடன் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேராவூரணி நகரில் நான்கு வழிச்சாலையை அமைக்க வேண்டும்.
நகருக்கு அழகு சேர்த்த ஆனந்தவள்ளி வாய்க்கால் பல வருடங்களாக தூர்வாரி மராமத்து செய்யப்படாமல், தூர்ந்துபோய் விவசாய பாசனப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் என ஆறு சட்டமன்ற தொகுதிகளை இணைக்கும் காரைக்குடி- திருவாரூர் இடையேயான இரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில் அகல இரயில் பாதை திட்டம் பணிகள் நிறைவேற்றப்படாமல் காலதாமதமாகிறது.
பொதுமக்கள் மற்றும் இரயில் பயணிகள் நிலையை கருத்தில் கொண்டு, போதிய நிதி ஒதுக்கீடு செய்து காரைக்குடி- திருவாரூர் அகல இரயில் பாதை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது " என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
செய்தி மற்றும் படம்:
எஸ். ஜகுபர்அலி, பேராவூரணி.
No comments:
Post a Comment